Monday, November 5, 2012

கவிதை துணுக்குகள்!

இடம் பொருள் கண்டு நீ சிரி
பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன
பூங்காங்களில்!
              --- x --- 
சாலை கடக்கும் உன்னை
சலனமின்றி கண்டு மகிழ் 
என்றது சிகப்பு விளக்கு!
              --- x --- 
வெட்கம் நிறுத்திடு நீ
பற்களிடை சிக்கி
உடையும் பிறைநிலாக்கள்!
              --- x --- 
பிணமான தேநீர் கோப்பைகளுக்கு
ஓர் அடையாளம் உண்டு -
உன் இதழ் பூச்சின் நிறம்!
              --- x --- 
காதலில் எதிர்பார்ப்புகள் இல்லை -
காதலின் முதல் பொய்!
              --- x --- 
பெண்மை... 
மென்மை...
மென்மைத் தன்மை...
அறிதலில் ஆண்மை!

பெண்மை... 
தொன்மை
தொன்மைத் தன்மை
கண்டது ஆண்மை
தாய்மை எனும் தூய்மை!
              --- x --- 
சலூன் கடை தொலைக்காட்சியில் 
நகைச்சுவைக்காட்சி என் சிரிப்பையும் 
சேர்த்து மழித்தது சவரக் கத்தி!
              --- x --- 
மகிழம்பூ மரத்தின் மேனியில்
மறந்தவளின் பெயர் வடுவாக!
புதுமனையாள் கரம்சேர்த்து 
பூங்கா சென்றபோது
கடைக்கண் வருடியது மறைவாக!
              --- x --- 
மிதமிஞ்சிய மின்தடை
அனைவர் மனதிலும் 
அணுஉலைகள்!

யானைவாய் செலவு
எறும்புவாய் சேமிப்பு
யூ.பி.எஸ்சில் மின்சாரம்! 

கைவிசிறிகள் "சீலிங்"
பார்த்து சிரிக்கின்றன
"விதி வலியதென்று"
              --- x --- 
உரசும் இதழ்களில்
உராய்வை குறைக்கவே
எச்சில் எனும் கள்!

மின்தடை நேரத்தில் 
இதழ்களில் சிறுமின்சாரம்
நம் முத்தம்!

அடிக்கடி ஆள்மாறும் 
அமைச்சர் பதவி போல்
நம் இதழ்கள் அடிக்கடி 
இடம் மாறட்டுமே!
              --- x --- 
ஏழ்வண்ணமும் மீளாதோ
மீண்டும் ஒற்றை மழைத்துளியில்!
              --- x --- 
வேரற்ற மரம் நான்
கடைக்கண் கண்டபோதே
விழுந்து விட்டேன் 
விழுதுவிட்டேன்
காதல் வாழ்விலே!
              --- x --- 
தனிமையில் காதல் சுகம் 
தகிப்பது போதாதென்று 
மழை ரசித்து சுகம் கண்டு 
துரோகமிழைத்தேன் காதலுக்கு!
              --- x --- 
எப்படி இருக்கிறாயென
என்னவள் கேட்டது 
என்னுளிருக்கும் அவளிடமே!

கண்களின் வழியே இதயத்தின்
நேச வரிகளை படிப்பவள் நீ !

உன்னோடு காதல் 
உற்சவம் இல்லையேல் 
சவம் தானே என் உடல்!

வெற்று மனிதர்களை விட்டு
வேற்று கிரகம் செல்ல எளிய
வழி காதல்தானே....!

நீயென்னை கடந்திடு
நானும் கடக்கிறேன்
வாழ்வை உன் நினைவோடு
"காதலில் தோல்வி உனக்கே!"

              --- x ---