Thursday, August 25, 2011

மெளனமே! மெளனமே! மெளனமே!

மெளனம், அமைதி, வேறுபாடு?
அதை அறிய முற்பட்டேன்
மன அமைதி இழந்தேன்
மெளனம் ஆனேன்!

ஆசிரியர் கேள்விக்கு
பதிலறியா மாணவன்
தரும் பதில் மெளனமே!

பொம்மை வேண்டாமென
பொரிந்த பெற்றவளை
கோபம்கொண்டு டூ விட்டு
வாய்பேசாத குழந்தையை
பொம்மையாய் மாற்றுமே மெளனமே!

ஊடல் கொண்ட காதலர் இடையே
உண்மைக் காதல் உயிர்பெறுமே
காதலில் இருமனம் கொள்ளுமே
அகஇன்பமே சிறுகோபமே
உடம்பில் நரம்பில் உஷ்ணமே
உள்ளத்தில் காதல் பெருக்குமே
அதுவே உயிரின் மெளனமே!

உயிருக்குயிராய் உடலின் நிழலாய்
எண்ணத்தின் பிம்பமாய் வாழ்ந்தவரின்
உயிர் பிரிந்த உடலருகே
அழுகை வராது விழிநீரும் இராது
அதிர்ச்சியில் நம்மனம் மெளனமே
நம்முகமே வான் நோக்குமே!

எதிர்கட்சியாய் இருந்தாலும்
எதிரில் அமர்ந்தாலும் வார்த்தை
ஏதுமின்றி பேச வழியுமின்றி
எதுவும் பேசாது வாயே திறக்காது
எதிர்கட்சித்தலைவர் தமிழகத்தில்
இருப்பதும் காப்பதும் மெளனமே!

மெளனமே ஒரு மொழியாம்
பல நேரங்களில்
பல கேள்விகளில் தப்பிக்க
மெளனமே ஒரு வழியாம்!

Monday, August 22, 2011

நீயில்லையே! எனக்கு உலகில்லையே!

நம் மனதில் அழியாக்
காதல் இருக்கையில்
மாலை நாமிருப்போமே
மரத்தடி இருக்கையில்!

மனதில் காதலுண்டு
மயக்கும் மாலையுண்டு
கையிலே பூச்செண்டு
நீயில்லையே! எனக்கு உலகில்லையே!

பூவை நீவருவாயென்று
பூவுதிர்த்த மரமின்று
ஏன்நீ தனியென்று
கேட்குதடி! எனக்கு வலிக்குதடி!

நாட்டுல எதுவும் சரியில்ல!

அன்னா ஹசாரே
உண்ணா விரதம்!

சரியா நாலு நாளாச்சு
ஸ்ட்ரைக்கால லாரி நின்னு போச்சு!

கால் வருசம் போனபின்னே
சுப்ரீம்கோர்ட்டு சூடு வச்சதண்ணே!
பாடப்புத்தகம் பள்ளிக்கு வந்திருச்சு
காலாண்டு பரிச்சையோ போயிருச்சு!

அசோகரு ரோட்டோரம் மரத்த நட்டாரு
அரசியல்வாதி அதப்புடுங்கி வித்தாரு!
வெட்டி சாச்ச மரம்போல ரோட்டுல
உருளுறான் தமிழன் டாஸ்மாக் சரக்கால!

என்ன சொல்ல படும்பாட்டை
பாடிப்புட்டேன் எம்பாட்டை
உடனே திருத்தணும் நம்நாட்டை!

வானிலே நம் வாழ்விலே!

வாழ்க்கை வானம் போன்றது
நீள அகலம் கண்டவர் யார்?
வானில் மழைத்துளிபோலே
வாழ்வில் நட்புத்துளி விழுந்தாலே
வானம் கிழித்த வளைகோடாய்
வானவில் வண்ணமே தோன்றுமே
வானிலே நம் வாழ்விலே!

அன்னா ஹசாரே! திரண்டது நாடே!


எதிர்த்து பின் பணிந்தது மத்தியம்
வென்றது அன்னாவின் சத்தியம்!
பணப்பசி அடங்காதவரை அடக்க
நீ இருந்தாய் ஒரு உண்ணாவிரதம்!

ஒரு நாடு பல கட்சி
ஒரு ஆட்சி பல ஊழல்
ஒரு மசோதா பல எதிர்ப்பு
ஒரு குடிமகன் சிறையில் அடைப்பு!
ஜனநாயகமா? தனிநாயகமா?

ஒற்றை மனிதனுக்காக
ஒரு ஊரடங்கு உத்தரவு எதற்கு?
அப்போ ஆட்சியாளருக்கு பயமிருக்கு
மக்களிடையே மதிப்புமிருக்கு!

ஊழல் குழந்தைக்கு
பால் ஊற்றி வளர்தவர்க்கெல்லாம்
லோக்பால் கொண்டு பால் ஊற்றினாயோ?
பேசாத பிரதமரை கூட பேச்சுவார்த்தைக்கு
அழைக்க வைத்தாயோ?

உயர்ந்த நோக்கத்துக்காக
உண்ணாவிரதம் இருக்ககூட
உரிமை இல்லாத நாம்
எல்லாம் இந்நாட்டு மன்னர்தான்!

என் புத்தகத்து மயிலிறகு!


எல்லாக் காதலும் ஏகாந்தமே
என்னுடையதும் விதிவிலக்கல்ல!

திரியின் நுனியில் தீ இல்லா
தீபத்திற்கு அழகேதடி!
பாவை நீயும் பார்வையாலே
மோகக்காதல் தீயை பற்றவையடி !
பற்றவை மனதை எரியவை
மறக்கவை உலகில் மற்றவை!

மங்கையின்நினைவை தவிர
எல்லாம் மறத்தலும்
மங்காத காதலைத் தவிர
எல்லாம் துறத்தலும்
மாறாத அந்த நினைவாலே
எப்போதும் இருத்தலும்
மனம் மறுக்காது இப்போதே
இன்பமாய் இறத்தலும் காதலோ!

அவள் மீது கொண்ட அழகிய காதலை
நான் மட்டும் ரசிப்பேன் எப்போதும்
ஆம் அது யாரும் அறியாத
என் புத்தகத்து மயிலிறகு!

Saturday, August 13, 2011

சகோதர தினம்!

மணிக்கட்டில் கயிறுகட்டி ஒரு
மணியான தத்துவத்தை
மலரவைத்த மங்கையரே!

காதலென்று முட்டும் காளையர்க்கு
கன்னியர் இன்று கட்டுவது
மூக்கணாங்கயிறல்லவோ!
காதல் சொல்ல நேரமொன்று
வருமா என்று ஒருதலை தலையாய்
காதல் கொண்ட ஆணுக்கெல்லாம்
கதிகலக்கும் நாளல்லவோ!

சகமனுசியாய் பார்த்த பெண்ணை
சகோதரியாய் பார்ப்போமே!
முப்பத்மூனு சதம் எதுக்கு
முழுசாய் சமமென்று சொல்வோமே!

தாய் தங்கை அக்காளென்று
தனியாய் பாசம் கொண்டோமே!
எல்லாப் பெண்ணும் சமம்தானென்று
தேசம் கடந்த நேசத்தை வளர்ப்போமே!

Friday, August 12, 2011

வகுப்பறை காதல் வரையறை


கரும்பலகை மறந்து உன்
கருந்கூந்தலில் கவனம்!
ஆசிரியரின் கேள்வி மறந்தேன்
அதற்கெல்லாம் மவுனம்!
தமிழ் பாடம் எனில்
கவிதை வரைகிறேன்
ஆங்கில பாடம் எனில்
அதை சரிபார்க்கிறேன்
அறிவியல் பாடம் எனில்
அன்பை ஆராய்கிறேன்
கணித பாடம் எனில்
காதலை பெருக்குகிறேன்
சமூக பாடத்தின் போது
நல்ல சமூகமாய் வாழ
ஆசைப்படுகிறேன் உன்னோடு!

Thursday, August 11, 2011

தங்கமகளின் தங்கத்தோடு!

காதல் கனிந்த பின்
கடற்கரையில் அமர்ந்தபின்
காதலியின் காதோரமாய்
காதல் கதை பேச ஆசை
இதமாய் காதல் வாசம் நுகர்ந்து
இதழ் திறந்த போது
வார்த்தைகள் யாவும் வாயுவானதே!
தங்கதோடு என் தாடை தொட்டபோது!

காதலில் முழ்கிய பின்
காலநேரம் தெரியாதாம்!
அதனாலே இனிதாய்
ஒரு வணக்கம் பொதுவாய்!

காதல் வணக்கம்!


ஒரு தேயாத நிலவுக்கு
குறுஞ்செய்தி அனுப்பியே
என் நேரமும் நகமும் தேய்கிறதே!

இனி அவள் என்று ஆனதால்
இனியவளிடம் இரவெல்லாம் பேசியே
என் விழியும் வாழ்வும் விழிக்கிறதே!

பெருங் காதல் வளர்க்க
குறுஞ்செய்திகள் போதுமோ?

காலை நேரத்தில் கலகலப்பாய்
ஒரு காதல் வணக்கம்!

உன் உள்ளங்கை சூட்டை
என் கன்னங்கள் உணர!
என் உள்ளத்துப் பாட்டால்
உன் காதுகள் குளிர!
காதல் வளர்ப்போம் பெண்ணே!

மனித அறிவும் சரிவும்!


நல்ல விளை நிலங்கள்
நல்ல விலை போயிருச்சே!
விவசாயம் செஞ்சவங்க
சாயந்தான் வெளுத்திருச்சே!

மென்பொருள் வளந்திருச்சு
தின்பொருள் குறைஞ்சிருச்சு!
அறிவியல் வளந்துருச்சு
பசுமை குறைஞ்சிருச்சு!

நாளும் பொழுதும் நாம்
அறிவில் வளர்ந்தோம்!
சரியா பயன்படுத்தாம நாம்
சரிவில் வீழ்ந்தோம்!

Monday, August 8, 2011

குடிநீ(ர்) பாட்டில்!


குடிமக்களே! குடிநீருக்காக
அங்கே இங்கே எங்கேயும்
அலைய வேணாம் வீணா!
எங்க போனாலும் சுலபமா
கிடைக்குதுங்க அக்வாபீனா!
...
எல்லாத் தமிழனும்
அறநெறி மறந்தோம்
பிசிலெறிய தொறந்தோம்!

பால் விலையும் இந்த
பாட்டில் விலையும் ஒன்னுதான்!
புனிதமான நதிகளெல்லாம் இப்போ
புழுதி கிளம்பும் மண்ணுதான்!

பாலாறு தேனாறு எல்லாம்
பாடப் புத்தகத்து வரலாறு!
தொழில் நோக்கம் கொஞ்சம்
வழிமாறிப் போனதால இந்தகோளாறு!

குடிவாழ குடித்துவாழ
நீர் நிலை ஏதும் தேவைஇல்ல!
குடிநீரை விக்கிற நிறுவத்தின்
நிதிநலைமை குறைய வில்ல!

பாத்து பழகி வாங்கி கைப்பிடிச்சி
அனுபவிச்சா விடமுடியாது
காதலிச்ச அவளும் சரி
நீகுடிச்ச அக்வாவும் சரி!

பசின்னு வந்த பிச்சைக்கெல்லாம்
ருசியான சோறுபோட்டதப்போ!
வாடி வறண்ட தொண்டைக்கு
வடை கூட வாங்கி தாரேன்
தண்ணி மட்டும் கேக்காத இப்போ!

புட்டியால பொழச்சவன்
புட்டியால தொலைச்சவன்
ரெண்டுக்கும் வித்தியாசம் ஏதுமில்ல
பொழச்சவன் வெளியூரு
தொலைச்சவன் உள்ளூரு!

தாகம்னு வந்தா தண்ணி
குடிக்கத்தான் வேணும்!
இயற்கைய அழிச்சாக்க உடனே
நாம தடுக்கத்தான் வேணும்!

வா மச்சி தம்போடலாம்!

வா மச்சி தம்போடலாம்!
வாலிபர்களின்
வசீகர வசனம்!

கையில காசில்ல என்று சொல்ல
அக்காலத்தில்
கஞ்சிக்கு வழியில்ல!
மச்சி! தம்முக்கு கூட காசில்ல !
இக்கால இளைஞர்கள் இப்படி!

புகை உடல்நலத்திற்கு தீங்கானது
சந்தோசத்திற்கு தீங்கு இல்லையோ!

அவரவர் உடல் எரிந்த சாம்பலை
அப்போதே தருவதும் நீதானோ?

உன்னைப் பற்ற வைக்கும்போதுதான்
ஆறாம் அறிவு புகைகிறதோ?

புத்துணர்ச்சி சுரப்பிகளை எல்லாம்
புதுப்பிப்பது உன் புகைதானோ?

பஞ்சு வழி வந்த புகையெல்லாம்
நெஞ்சுக்குள் நுழைகிறதே!
வெண்பஞ்சு மஞ்சள் கறையானதே
என்நெஞ்சு என்னானதோ?

Wednesday, August 3, 2011

கனிந்தது வாழ்வும் - காதலும்!

முதுமையில் காதல் என்பது
அதிகமாகுமோ?
தோலின் சுருக்கங்கள் போல!
------- --------- -------
உதிர்ந்தது இளமை மட்டும்தான்
உணர்வுகள் அல்ல!
-------- ---- -----
கடந்தது காலம் மட்டும்தான்
கனிந்தஅன்பை அல்ல!
-------- ---- -----
தளர்ந்தது வயது மட்டும்தான்
காதல் அல்ல!
-------- ---- -----
இழந்தது உறவுகளை மட்டும்தான்
உன்னை அல்ல!
-------- ---- -----
பொக்கைவாய் வழியே காதல்
பொத்துக்கொண்டு வருதோ?
------ ------ ----
கன்னத்தின் குழி மறைந்து
கன்னமே குழியான பின்பு
கனிவாய் ஒரு முத்தமிட்டாயே
காதலியே! காதல் கிளவியே!
------ ------ --------