Friday, July 29, 2011

வானம் தொட்ட வறுமைக்கோடு!

ஆடிப்பட்டம் விதைக்கலான்னு
காணியத்தான் உழுதுபோட்டேன்
செம்மண் காட்டுல
கலப்பைபோட்ட கோட்டுல
நல்லாவே நானும்பாத்தேன்
அழியாத வறுமைக்கோட்ட!
------       --------      ---------
என்னோட மானங்காக்க
மழையே நீ வந்தா
ரெண்டுகோடும் அழிச்சிருமே
சந்தோசம் முளைச்சிருமே!
------       --------      ---------
மழையேதும் பெய்யாம
களையாத்தான் முளைச்சிருச்சு!
செலவேதும் இல்லாம
என்எருதும் மேஞ்சிருச்சு!
------       --------      ---------


விதைநெல்லு நாவாங்க
விவசாய கடன் வாங்க
விவரங்கேட்டு நான்போனேன்
சதிசெய்யும் மழையப்போல
அதிகாரி அவன் சொன்னான்
விவரமெல்லாம் ஏதும்வேணாம்
தாரத்தோட தாலி வேணும்!
ஊருக்குள்ள எனக்கு பகையில்ல
கடன்வாங்க வேற நகையில்ல!
------       --------      ---------
பட்டணத்து சீமாட்டி
கட்டிவந்த பட்டுசேலை
அதுபோல எங்கொல்லை
விளைஞ்சாக்க அழகு கொள்ளை!
------       --------      ---------
மழைமட்டும் பேஞ்சிருந்தா
வறுமை கொஞ்சம் தள்ளிநிக்கும்!
வளம்​கொஞ்சம் வந்திருந்தா
என்புள்ள படிச்சிருக்கும்!
------       --------      ---------
கஷ்டத்தை தீக்கத்தான்
கலெக்டர்கிட்ட மனுபோட்டேன்
விதைபோட நீர்வேணும்னு
மழைக்கிட்ட மனுபோட்டேன்
இதுவரை பதிலில்ல
மனுரெண்டும் நிராகரிப்போ!

Wednesday, July 27, 2011

எரியும் காதலும் உருகும் மெழுகும்!

எரியாத திரியாய்
திரிந்த என்னை
காதல்தீ ஏற்றித்தான்
உயிரின்திரியை எரித்தாயே!

காதல் வெப்பத்தில்
உருகி உருகி
உருமாறி நின்றாலும்
அழியாத மெழுகாய்
உன் நினைவு!

நான் மெழுகுவர்த்தி
உருகிப்போனேன்
ஒரு மெழுகுசிலையை
நேரில் பார்த்ததால்!

மெழுகை உருக்கிய மெழுகே
காதல்தீ ஏற்றியதுன் அழகே!

எரிதலுக்கு காற்று தேவை
அறிவியல் சொல்கிறது
உனக்காகத்தான் எரிகிறேன்
மூச்சுகாற்றை எனக்காகவிடு!

மென்மையான மேனி காதல்
வெப்பத்தை தாங்கதென்று
காதல் உஷ்ணம்
தாங்காதோ உன் மேனி
திரி அணைந்து புகைபரவும்போது
திரும்பி வந்தாயே!

மெழுகை உருக்கிய மெழுகு நீ
காதல்தீ ஏற்றிய அழகே நீ!

Friday, July 22, 2011

தனி​மையில் இனி​மை!



தனிமை என்பது உடலுக்கு
மட்டும்! ஆயிரம் நினைவுகள்
மனதில் புயலாய் முட்டும்!

காதலில் நனைந்தவர்க்கு இனிமை
கிட்டும்! இதயம் வலித்தால்
விழியில் கண்ணீர் சொட்டும்!

துன்பம் தணிக்க இன்ப
தனிமையை நாடு! வெற்றி
வந்தால் சொந்தங்கள் தேடு!

நம்மனதுடன் பேச நல்மனம்
இல்லா எல்லா நேரமும்
நம்மனம் தனிமைதான்!

Thursday, July 21, 2011

காதலின் நிறம்!


நினைவுகள் நித்தம்நித்தம்
நில்லாமல் சுற்றுவதால்
கண்இமைகள் சுமையாகி
தூக்கமில்லை எனும்போது
என் விழிநிறம்போல
காதலின் நிறம் "சிவப்பு"!

அதிகாலை விடிந்தாலும்
நீலவானம் கருத்தாலும்
வேலைபளு மிகுந்தாலும்
நம்முகம் சந்திக்கும்
அந்திவேளை நேரம்போல
காதலின் நிறம் "மஞ்சள்"!

கடற்கரை மணல்மேலே
பூங்காவின் புல்மேலே
மனமிரண்டும் ஒன்றுபோலே
விரல்தொட்டு இதழ்கள்பேசும்
காலந்தெரியாத காதல்போலே
"கருங்"கூந்தலில் முகம்புதையும்போது
காதலின் நிறம் "கருப்பு"!

காதல் பிறந்து
காதலில் தவழ்ந்து
காதலின் நடைபழகி
நாமிருவர் என்றாகி நடைபோடும்போது
கருந்தூசி ஒன்று உன்
விழி"வெண்" படலத்தில் விழுந்தது
என் உயிர்க்காற்றை ஊதி
வெளியே தள்ளும்போது
காதலின் நிறம் "வெண்மை"!





Monday, July 18, 2011

விலைகுறைந்த செல்போனும், விலைமதிப்பற்ற என் காதலும்!

அவள்
மூச்சுக் காற்றின் ஓசைமுதல்
முத்தத்தின் சப்தம் வரை
காதில் சேர்த்து காதல் வளர்த்தது
நீ!
 -----       -------        ---------
என்
இதயத்தில் அழியா பிம்பம்
அவள்முகம்!
அதை வால்பேப்பராய் வைத்து
ஒளிவீசி வாழ்வது
நீ!
 -----       -------        ---------
நான்
காலையில் அவளோடு காதல்
செய்யும்போதும்
அந்திவேளை அவளோடு
அரட்டையின்போதும்
என் உடலின் உஷ்ணத்தை
உள்ளங்கையில் உணர்பவன்
நீ!
  -----       -------        ---------
குமரி
அவள் அனுப்பிய குறுஞ்செய்தி
பூக்களை எல்லாம்
பூங்கொத்தாய் சேர்த்துவைத்த
பூக்கூடை
நீ!
  -----       -------        ---------
என்
உள்ளத்தில் வசிப்பவள்
உலகில் எங்கிருந்தாலும்
உறவை வளர்த்து
தொலைவை குறைத்த அறிவியல்
நீ!
  -----       -------        ---------
என்
சம்பளம் முழுதும் சாப்பிட்டாலும்
பசி அடங்காதவன்
நீ!

Wednesday, July 13, 2011

காத​லை மட்டும்!


இயன்ற பொழுதும்
காதலை மட்டும்
என் பேனா எழுதும்!
-----     -----     -----     ----
விழியில் விழுந்தேன்
வாழ்வு கரைந்தது!
நிமிர்ந்து எழுந்தேன்
காதல் தடுத்தது!
கனவுகள் அனைத்தும்
உன்னால் ஊனமானது!
அழியாக் காதல்
அதுவே என் வேலையானது!
-----     -----     -----     ----
தெருமுனையில் வரும்போது
விழிமுனையில் நீபார்த்தது
பேனாமுனையில் வடிந்தது
கவிதையாய்! காதலாய்!
-----     -----     -----     ----
வனத்தில் திரிந்த
வண்டு நான்!
ஒரு புல்லியில் அமர
வைத்த பூவாய் நீ!

-----     -----     -----     ----
யாரும் செய்யாததை நீ செய்
அப்போதுதான்
என்மீது காதல் என்றாய்!
கனத்த காவியமாய்
உன்னை காதல் செய்கிறேனே
இதை யார் செய்ய முடியும்!
-----     -----     -----     ----