Friday, July 29, 2011

வானம் தொட்ட வறுமைக்கோடு!

ஆடிப்பட்டம் விதைக்கலான்னு
காணியத்தான் உழுதுபோட்டேன்
செம்மண் காட்டுல
கலப்பைபோட்ட கோட்டுல
நல்லாவே நானும்பாத்தேன்
அழியாத வறுமைக்கோட்ட!
------       --------      ---------
என்னோட மானங்காக்க
மழையே நீ வந்தா
ரெண்டுகோடும் அழிச்சிருமே
சந்தோசம் முளைச்சிருமே!
------       --------      ---------
மழையேதும் பெய்யாம
களையாத்தான் முளைச்சிருச்சு!
செலவேதும் இல்லாம
என்எருதும் மேஞ்சிருச்சு!
------       --------      ---------


விதைநெல்லு நாவாங்க
விவசாய கடன் வாங்க
விவரங்கேட்டு நான்போனேன்
சதிசெய்யும் மழையப்போல
அதிகாரி அவன் சொன்னான்
விவரமெல்லாம் ஏதும்வேணாம்
தாரத்தோட தாலி வேணும்!
ஊருக்குள்ள எனக்கு பகையில்ல
கடன்வாங்க வேற நகையில்ல!
------       --------      ---------
பட்டணத்து சீமாட்டி
கட்டிவந்த பட்டுசேலை
அதுபோல எங்கொல்லை
விளைஞ்சாக்க அழகு கொள்ளை!
------       --------      ---------
மழைமட்டும் பேஞ்சிருந்தா
வறுமை கொஞ்சம் தள்ளிநிக்கும்!
வளம்​கொஞ்சம் வந்திருந்தா
என்புள்ள படிச்சிருக்கும்!
------       --------      ---------
கஷ்டத்தை தீக்கத்தான்
கலெக்டர்கிட்ட மனுபோட்டேன்
விதைபோட நீர்வேணும்னு
மழைக்கிட்ட மனுபோட்டேன்
இதுவரை பதிலில்ல
மனுரெண்டும் நிராகரிப்போ!

No comments:

Post a Comment